இலங்கையில் நடைபெற்று வரும் ‘ஏ’ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று முன்தினம் இந்தியா ஏ – இலங்கை ஏ அணிகள் மோதின. இதில் சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றி பெற்றது.
போட்டி முடிவடைந்ததும் இலங்கை வீரர்களான விஷேன் ஹலம்பகே, வனுஜ சஹான் ஆகியோர் இந்திய அணி வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி, சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோரை நோக்கி ஏதோ கூறினர். இதனால் கோபம் அடைந்த சூர்யவன்ஷி, விஷேன் ஹலம்பகே நோக்கிச் சென்று அவரது நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு அணி வீரர்களும் அவர்களை விலக்கிவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக லக்னோவில் நேற்று இந்திய கிரிக்கெட் சீனியர் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளரான சாய்ராஜ் பகதுலே கூறியதாவது: இலங்கையில் நடந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி எந்த அளவுக்குத் தூண்டப்பட்டார் என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில், எனக்குத் தெரிந்தவரை வைபவ் மிகவும் அமைதியான, நிதானமான வீரர்.
இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாக இருந்தாலும், அங்குள்ள அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் அவருக்கு நிலைமையை எடுத்துக்கூறி புரிய வைப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதே சமயம், இலங்கை வீரர்களும் மைதானத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இது நமக்கும் பொருந்தும்.
இந்த சம்பவத்திலிருந்து சூர்யவன்ஷி நிச்சயம் பாடம் கற்றுக்கொள்வார். அவர், பல பொறுப்புகளைச் சுமக்கக்கூடிய, மிக முக்கியமாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு இளம் வீரர். இனிவரும் காலங்களில், இதுபோன்ற தவறை அவர் மீண்டும் செய்ய மாட்டார் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
