ஐபிஎல் 2026 சீசன் முதற்கட்ட அட்டவணை வெளி​யீடு: சிஎஸ்கே 30-ம் தேதி ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை

0
17

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்​தி​யா​வின் பல்​வேறு நகரங்​களில் நடை​பெற உள்​ளது. இதற்​கிடையே தமிழ்​நாடு, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ள​தால் ஐபிஎல் தொடருக்கான அட்​ட​வணை வெளி​யிடு​வ​தில் தாமதம் நிலவி வந்தது.

இதற்​கிடையே 19-வது சீசனுக்​கான ஐபிஎல் போட்டி அட்​டவணை 12-ம் தேதிக்​குள் வெளி​யிடப்​படும் என பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா தெரி​வித்​திருந்​தார். இந்நிலை​யில் நேற்று இரவு 7 மணிக்கு முதற்​கட்ட போட்டி அட்​ட​வணை வெளி​யானது. இதில் மார்ச் 28 முதல் ஏப்​ரல் 12 வரை நடை​பெறும் 20 ஆட்​டங்​கள் மட்​டும் இடம் பெற்றுள்ளன. சட்​டப் பேரவை தேர்​தலுக்​கான தேதி​கள் அறிவிக்​கப்​பட்​டதும் முழு போட்டி அட்​ட​வணையும் வெளியிடப்​படும் என பிசிசிஐ தெரி​வித்​துள்​ளது.

ஐபிஎல் 19-வது சீசனின் தொடக்க ஆட்​டத்​தில் வரும் 28-ம் தேதி நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்​சிபி), 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன் ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் பெங்​களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் இரவு 7.30 மணிக்கு நடை​பெறுகிறது.

முதற்​கட்​ட​மாக வெளி​யிடப்​பட்​டுள்ள 20 ஆட்​டங்​களும் பெங்​களூரு, மும்​பை, குவாஹாட்​டி, நியூ சண்​டிகர், லக்​னோ, கொல்​கத்​தா, சென்​னை, டெல்​லி, அகம​தா​பாத், ஹைத​ரா​பாத் ஆகிய 10 நகரங்​களில் நடை​பெறுகிறது. முதற்​கட்ட அட்​ட​வணை​யில் ஒவ்​வொரு அணி​யும் 4 ஆட்​டங்​களில் விளை​யாடு​கின்​றன.

முதற்​கட்ட போட்டி அட்​ட​வணை​யில் ஒரே நாளில் 2 போட்​டிகள் நடத்​தப்​படும் டபுள்​-ஹெட்​டர்ஸ் 4 ஆட்​டங்​கள் நடை​பெறுகின்​றன. இந்த நாட்​களில் பிற்​பகல் 3.30 மணிக்கு ஒரு ஆட்​ட​மும், இரவு 7.30 மணிக்கு மற்றொரு ஆட்​ட​மும் நடை​பெறும். மும்பை இந்​தி​யன்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 29-ம் தேதி வான்​கடே மைதானத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

5 முறை சாம்​பி​யான சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2008-ம் ஆண்டு சாம்​பிய​னான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் குவாஹாட்​டி​யில் நடை​பெறுகிறது. சிஎஸ்கே அணி தனது 2-வது ஆட்​டத்​தில் ஏப்​ரல் 3-ம் தேதி பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இரவு 7.30 மணிக்கு நடை​பெறுகிறது.

சிஎஸ்கே தனது 3-வது ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி​யுடன் பெங்​களூரு​வில் ஏப்​ரல் 5-ம் தேதி பலப்​பரீட்சை நடத்​துகிறது. இதன் பின்​னர் அடுத்த ஆட்​டத்​தில் சிஎஸ்கே ஏப்​ரல் 11-ம் தேதி சேப்​பாக்​கத்​தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சந்​திக்​கிறது. முதல் டபுள் ஹெட்​டர் போட்டி ஏப்​ரல் 4-ம் தேதி நடை​பெறுகிறது.

இதில் பிற்​பகல் 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்​தி​யன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. அன்​றைய தினம் இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் – ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோத உள்​ளன.

மேற்கு ஆசிய போரால் பாதிப்​பு?

பிசிசிஐ அதிகாரிகளின் கவனத்தில் தற்போது மாநிலத் தேர்தல்களைத் தவிர, மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலும் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. ஏனெனில் இந்த போர் சர்வதேச விமானப் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக தோஹா மற்றும் துபாய் போன்ற முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் பெருமளவு முடக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்து ஒரு வாரம் ஆகியும், தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் இன்னும் தங்கள் நாடுகளுக்குச் சென்றடையவில்லை. இதேபோல், இந்த இரண்டு நாடுகளையும் சேர்ந்த ஐபிஎல் வீரர்கள், தங்களது அணிகளுடன் சரியான நேரத்தில் இணைவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுதொடர்பாக ஐபிஎல் அணியை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் சரியான நேரத்தில் இந்தியாவுக்கு அழைத்து வருவது கடினமான காரியம். அதோடு, மேற்காசியப் போர் காரணமாக விமானக் கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன” என்றார்.

சிக்​கலில் பெங்​களூரு போட்டி

பெங்​களூரு​வில் நடை​பெற​விருக்​கும் ஐபிஎல் போட்​டிகள், கர்​நாடக அரசால் அமைக்​கப்​பட்ட நிபுணர் குழு​வின் ஒப்​புதலுக்கு உட்​பட்​டவை என பிசிசிஐ அறி​வித்​துள்​ளது. நிபுணர் குழு​வினர் நாளை (13-ம் தேதி) சின்​ன​சாமி மைதானத்​தில் ஆய்வு நடத்த உள்​ளனர்.

அப்​போது, ஐபிஎல் போட்​டிகளை நடத்​து​வதற்​கான மைதானத்​தின் தயார்​நிலையை மதிப்​பீடு செய்ய, போட்டி நடை​பெறும் நாளன்று செய்​யப்​படும் அனைத்து ஏற்​பாடு​களும் ஒரு முழு அளவி​லான ஒத்​திகை மூலம் செய்து காட்​டப்​படும். இதில் பாது​காப்பு உள்​ளிட்ட அனைத்து விஷ​யங்​களி​லும்​ திருப்​தி அடைந்​தால்​ மட்​டுமே ஐபிஎல்​ போட்​டிகளை சின்​னசாமி மைதானத்​தில்​ நடத்​த அனும​தி வழங்​கப்​படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here