தவெக தலைவரான நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் புரொடக்க் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இதை ஜன.9-ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறுஆய்வுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு, கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார். படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பி்ல் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி வாதடினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா இந்த வழக்கில் நேற்று அளித்த தீர்ப்பில், ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்கிறேன். எனவே படத்தை வெளியிட ஏதுவாக உடனடியாக ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க வேண்டுமென தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
அந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மத்திய தணி்க்கை வாரியம் தரப்பில் காணொலி காட்சி வாயிலாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் நேரில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர், ‘‘இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய தனி நீதிபதி எங்களுக்கு எந்த அவகாசமும் வழங்கவில்லை. படத்தயாரிப்பு குழு, ஜன.6-ல் வழக்கை தாக்கல் செய்தனர். ஜன.7-ம் தேதி விசாரிக்கப்பட்டது.
ஜன.9-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியத்தின் மறுஆய்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென படத்தயாரிப்பு குழு கோராத நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டனர்.
பதிலுக்கு படத்தயாரிப்பு குழு தரப்பில் காணொலி மூலமாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹதகி மற்றும் நேரில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆகியோர், இப்படத்துக்கு கடந்த டிச.22-ம் தேதியன்று ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்துவிட்டு, அந்தக்குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் மூலமாக மறுஆய்வு செய்ய வேண்டுமென கோருகின்றனர்.
இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பதில் உள்நோக்கம் உள்ளது. உலகம் முழுவதும் ஜன.9 அன்று இப்படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தோம். தணிக்கை வாரியத்தின் உத்தரவால் தற்போது அது தடைபட்டுள்ளது. தனி நீதிபதி வழக்கை முழுமையாக விசாரித்து அதன்பிறகுதான் தீர்ப்பளித்துள்ளார் என்றனர்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தணிக்கை சான்றிதழ் பெறும் முன்பாக ஜனநாயகன் படத்தை வெளியிட தேதி குறித்தது எப்படி என்றும் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட வேண்டுமென நீதிமன்றத்துக்கு தேவையற்ற அழுத்தமோ, நிர்பந்தமோ கொடுக்கக்கூடாது என்றும், இந்த வழக்கில் பதிலளிக்க தணிக்கை வாரியத்துக்கு போதிய காலஅவகாசம் வழங்க வேண்டாமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
பின்னர் நீதிபதிகள், ஜனநாயகன் படத்தை வரும் ஜன.21-ம் தேதி வரை வெளியிடக்கூடாது என இடைக்காலத் தடைவிதித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இந்த உத்தரவின் மூலம் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







