பண மோசடி வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தொழிலதிபர் அனில் அம்பானிக்கு (66) அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன்பெற்று அதனை முறையாக செலவு செய்யாமல் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே சோதனை நடத்தி அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.
இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த நவம்பர் 14-ம் தேதி நேரில் ஆஜராகும்படி அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற சோதனை தொடர்பாக அனில் அம்பானியிடம் ஆகஸ்ட் மாதம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.














