அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை செயல்படும் வீடியோ காட்சிகளை இந்திய விமானப்படை நேற்று வெளியிட்டது.
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற ‘வாயுசக்தி’ போர் பயிற்சியின் முன்னோட்டமாக இந்த வீடியோ காட்சி விமானப்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. எதிரி நாட்டு விமானங்களை ரேடார் மூலம் கண்டறிந்து, எஸ்-400 ஏவுகணையைச் செலுத்தி அழிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. எதிரிகள் எட்டாத தூரத்தில் இருக்கலாம், ஆனால் எங்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்ற சக்திவாய்ந்த வாசகத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
மேலும் நீண்ட தூரத்தில் இருக்கும் இலக்கையும் துல்லியமாகத் தாக்கும் எஸ்-400 ஏவுகணை என்ற தகவலுடன் வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில், வானில் இருக்கும் இலக்கை முதலில் எஸ்-400 ரேடார் அமைப்பு கண்டறிகிறது. பின்னர் எஸ்-400 ஏவுகணை செலுத்தப்பட்டதும், அது துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட தூர இடைமறிப்பு அழிப்பு ஏவுகணை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு இந்திய விமானப் படை, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியபோது இந்த எஸ்-400 வகை ஏவுகணைகள்தான் பயன்படுத்தப்பட்டன என்றும் விமானப்படை கூறியுள்ளது.
எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை இந்திய ராணுவம் சுதர்சன சக்ரா என்று அழைத்து வருகிறது. இதை ரஷ்யாவின் அல்மாஸ்-அன்டே நிறுவனம் தயாரித்துள்ளது. 2018-ல் ஐந்து எஸ்-400 வகை தாக்குதல் ஏவுகணை அமைப்புகளை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. 2021-ல் முதல் அவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
சுமார் 600 கிலோமீட்டர் தூரமுள்ள இலக்குகளையும் இந்த ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி அழிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.














