Home விளையாட்டு செய்திகள் “இந்திய அணியை வீழ்த்தலாம் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலை” – ஷோயப் அக்தர் வேதனை...

“இந்திய அணியை வீழ்த்தலாம் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலை” – ஷோயப் அக்தர் வேதனை | T20 WC 2026

0

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 61 ரன்களில் வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர்.

அந்நாட்டு செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: “தகுதியற்ற ஒருவருக்கு பெரிய பொறுப்பை கொடுப்பதுதான் இந்த உலகின் மிகப்பெரிய குற்றமாகும். அவரால் தேசத்தை நிலைகுலைய செய்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? எதுவும் தெரியாத ஒருவர் (மோசின் நக்வி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக உள்ளார். அப்படி இருக்கும் உங்களால் என்ன செய்ய முடியும்? அணியை எப்படி திறன்பட இயக்க முடியும்.

அவரை சூப்பர்ஸ்டார் (பாபர் அஸம்) என சொல்கிறீர்கள். அவரால் ஒரு ஆட்டத்தை கூட வென்று கொடுக்க முடியவில்லை. இது மாதிரியான நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்களை தேர்வு செய்வதே அனைத்துக்கும் முதல் தவறாகும்.

இந்தியா உடனான ஆட்டத்தில் ஒரு இடத்தில் கூட ஆட்டத்தின் கட்டுப்பாடு பாகிஸ்தான் வசம் இல்லை. ஷாஹீன் அப்ரிடி மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். இன்றைய கிரிக்கெட் வடிவத்துக்கு இது தேவைப்படவில்லை. இவர்கள் அழுத்தத்தை கையாளும் வீரர்கள் அல்ல. ஒரு கட்டத்தில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியை நம்மால் வீழ்த்த முடியும் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலை இருந்தது” என்றார்.

இந்த ஆட்டத்தில் 176 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. அப்போதே அந்த அணியின் தோல்வி இந்த ஆட்டத்தில் உறுதி ஆகிவிட்டது என போட்டியின் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version