தமிழக குற்ற வழக்கு தொடர்(வு)த்துறை இயக்குநராக உயர் நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநராக பணியாற்றிய சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றார். அதையடுத்து அந்த இடத்தில் தற்காலிக பொறுப்பு இயக்குநராக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்பதவிக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு இப்பதவிக்கு விண்ணப்பித்த பலரிடமும் நேர்காணல் நடத்தியது.
இந்நிலையில் அந்தக்குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசின் குற்ற வழக்குத் தொடர்(வு)த்துறை இயக்குநராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றிய வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜாவை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி அவர் நேற்று குற்ற வழக்குத் தொடர்(வு)த் துறை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.