Home மாநில செய்திகள் 27 மாவட்டங்களில் இன்று கனமழை; மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று: வானிலை மையம் சொல்வது...

27 மாவட்டங்களில் இன்று கனமழை; மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று: வானிலை மையம் சொல்வது என்ன?

0

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா உட்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்காக இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும். இன்று (டிச.12) அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். நாளை (டிச.13) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

16, 17-ம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் 3 செ.மீ., மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, கோடியக்கரை, நாகப்பட்டினம், திருப்பூண்டி, தலைஞாயிறு, காரைக்கால், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரம், அதை ஒட்டிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் அவ்வப்போது தரைக்காற்று வீசக்கூடும். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சம் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version