சென்னை: நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி பண்டிகை கொண்டாப்படும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு, தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ‘அனைத்தும் வெற்றி’ என்ற நம்பிக்கையில், அன்னை மகா சக்தியை வணங்கி கல்வி கலை, தொழில் போன்றவற்றை தொடங்கும் நாள் விஜயதசமி திருநாளாகும். இத்தகைய சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில் முப்பெரும் தேவியரின் ஆசியால் அனைவர் வாழ்விலும் வெற்றி மேல் வெற்றி கிட்டட்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்: நம் அறிவு வளர்ச்சிக்கும், பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வித்தாக அமையும் அழியா செல்வம் கல்விக்கு கடவுளாக விளங்கும் சரஸ்வதியை போற்றும் விதமாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சாதி, மத, பேதம் இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்படும் இவ்விழாவில் தாங்கள் தங்கள் வாழ்வில் தொழிலிலும், கல்வியிலும் சிறந்துவிளங்கி உயர வேண்டும், வளர வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: ஊக்கத்துடன் கூடிய உழைப்பே வறுமையைப் போக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் இந்நாட்களில், தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு பெற்றிட வேண்டும்.
கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: ஒரு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்றால் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேலோங்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேலோங்குவதற்கு தொழிலாளர்களின் கடின உழைப்பே முக்கிய காரணமாகும். அத்தகைய தொழிலாளர்களுக்கும், மாணவச் செல்வங்கள் கல்வியில் சிறந்து விளங்கிடவும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவிபச்சமுத்து: இந்த நல்ல நாளில் இந்திய தேசத்திலும், தமிழகத்திலும் தொழில் வளமும், கல்வி மற்றும் செல்வமும் பெருகி, முப்பெருந் தேவியர்களின் ஆசியுடன், கல்வியில் சிறந்து, தொழிலில் உயர்ந்து, செல்வத்தில் நிறைந்து மக்கள் எல்லா வளமும் நலமும் பெற ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள்.