குஜராத் மாநிலம் சூரத் நகரில், பூஜைப் பொருட்களுடன் தவறுதலாகக் கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சூரத் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அண்மையில் தங்கள் இல்லத்தில் சிறப்புப் பூஜை நடத்தினர். பூஜை முடிந்தவுடன், வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட மலர்கள் மற்றும் இதரப் பொருட்களை ஒரு பையில் சேகரித்து பீரோவில் வைத்திருந்தனர். அதே பீரோவில் நான்கு கட்டுகளாக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணப் பையும் (500 ரூபாய் நோட்டுகள்), கவனக்குறைவாக அந்தப் பூஜைப் பொருட்களுடன் கலந்துள்ளது.
இதனை அறியாத குடும்பத்தினர், பூஜைப் பொருட்களை நீர்நிலையில் கரைப்பதற்காக அருகில் உள்ள கால்வாய்க்கு எடுத்துச் சென்று வீசினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் பூஜைப் பொருட்களுடன் சேர்ந்து பணப் பையும் மாயமானது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், கால்வாயில் இறங்கித் தேடுதல் வேட்டை நடத்தி, பணப்பையை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த மீட்புப் பணியின்போது இரண்டு வீரர்கள் லேசான காயமடைந்தனர்.
இக்கட்டான சூழலிலும் நேர்மையுடன் செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.














