ஓலா, உபேர் போல செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவையை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து முதல் மாநிலமாக மகாராஷ்டிராவில் விரைவில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதே திட்டத்தை டெல்லி அரசும் அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லி கூட்டுறவுத் துறை அமைச்சர் ரவீந்தர் இந்த்ராஜ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஓலா, உபேர் போல செயலி அடிப்படையிலான கூட்டுறவு டாக்ஸி சேவைக்கான திட்டத்தை தயாரிக்க அவர் உத்தரவிட்டார்.
இந்தத் திட்டத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை. இதனால் பயணக் கட்டணமும் குறையும் என்பதால் ஓலா, உபேர் நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சேவைக்காக டாக்ஸி ஓட்டுநர்களை கொண்ட கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட உள்ளது.