பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள் மற்றும் அரிய தங்க நாணயங்கள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மொன்டே பகுதியில், மதுபான உற்பத்தி ஆலை கடந்த 1899 முதல் 1970 வரை செயல்பட்டு வந்தது. தற்போது, அந்தப் பழமையான கட்டிடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ‘சிஏடபிள்யூ ஊஸ்ட் லான்டரன்’ என்ற சமூக நல அமைப்பு சார்பில், அங்கு புதிய அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கு பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றுவதற்காக பூமியில் பள்ளம் தோண்டிய போது, தங்கப் புதையல் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. 18 வயதான கோபெ என்ற பணியாளர் இந்தப் புதையலைக் கண்டுபிடித்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், “கழிவுநீர் குழாய்களை மாற்றுவதற்காக பள்ளம் தோண்டிய போது, திடீரென அங்கு ஏதோ கிடப்பதைப் பார்த்தோம். முதலில் அவை யூரோ நாணயங்கள் என்று நினைத்தேன். பின்னர், அது தங்கக் கட்டிகள் என தெரிய வந்தது” என்றார்.
தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட தங்கப் பட்டைகள் உள்ளிட்ட இந்தப் புதையலின் மதிப்பு, சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுபான ஆலை உரிமையாளர் தியோபிலஸ் வான் அஸ்ஷே என்பவருக்காகக் கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகையின் அடித்தளச் சுவருக்குள் ஒரு பையில் இந்தப் புதையல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
புதையல் கண்டுபிடிக்கப்பட்டதும் அதிகாரிகள் அந்தப் பகுதியைப் பாதுகாப்புப் பகுதியாக அறிவித்து, தங்கப் பொருட்களை பிரஸ்ஸல்ஸில் உள்ள பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். தற்போது, அவை யாருக்குச் சொந்தமானவை என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.
கிழக்கு ஃபிளாண்டர்ஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தைச் சேர்ந்த ஹன்னே ஒலிவியர் கூறுகையில், முதலில் அந்தத் தங்கம் திருடப்பட்டதா அல்லது ஏதேனும் குற்றச் செயலுடன் தொடர்புடையதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தப் புதையலுக்கு கட்டுமானப் பணியை மேற்கொண்ட நிறுவனங்கள், சமூக நல அமைப்பு மற்றும் தியோபிலஸ் வான் அஸ்ஷே குடும்பத்தின் வாரிசுகள் உள்ளிட்டோர் உரிமை கோரக்கூடும். பெல்ஜியம் நாட்டு சட்டப்படி, புதையலைக் கண்டுபிடித்தவர்கள் அதன் உண்மையான உரிமையாளர்கள் உரிமைகோர முன்வருவதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
