கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ், சீமான் வலியுறுத்தல்

0
362

தமிழகத்​தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை​யால் டெல்டா உள்ளிட்ட மாவட்​டங்​களில் பாதிக்​கப்​பட்​டுள்ள பயிர்​களுக்கு நிவாரணம் வழங்க வேண்​டும் என்று அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்​பாளர் சீமான் ஆகியோர் வலியுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பயிர்கள் சுமார் 12 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில், கனமழை காரணமாக சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் மூழ்கி முழுமையாக சேதமடைந்துள்ளன.

ஏற்கெனவே, கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு ஸ்டாலினின் திமுக அரசு பயிர் காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ஹெக்டேருக்கு பயிர் காப்பீட்டுத் தொகையாக வழங்கும் ரூ.84 ஆயிரம் கிடைக்கவில்லை. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.34 ஆயிரம் நிவாரணமாக வழங்க நான் வலியுறுத்தினேன். ஆனால், அந்த தொகையை திமுக அரசு வழங்கவில்லை.

குறிப்பாக, தேசியப் பேரிடர் நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரமாக அறிவித்த நிவாரணத் தொகையை கூட வழங்காமல், குறைத்து ரூ.13,500 -ஐ மட்டுமே இந்த அரசு வழங்கியது. அதையும் முழுமையாக கணக்கெடுத்து வழங்கவில்லை. இந்நிலையில், தற்போது புயல் மழையில் மீண்டும் விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டிருந்த பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

எனவே, இந்த அரசு கண்துடைப்பு கணக்கெடுப்பு நாடகம் நடத்தாமல், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களிலும் பிற மாவட்டங்கலிலும் மழை மற்றும் வெள்ளநீரால் மூழ்கியுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களை வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் முழுமையாகக் கணக்கெடுப்பு நடத்தி முழு நிவாரணத்தை முதல்வர் நேரடியாகச் சென்று வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதைய வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து திமுக அரசு இதுவரை எவ்வித முறையான அறிவிப்பையும் வெளியிடாதது கண்டனத்துக்குரியது. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்க்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்வதோடு, பயிர்க்காப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here