மகாராஷ்டிராவில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் அம்மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் உயிரிழந்தார். இந்தியாவில் நடைபெற்ற விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளில் முதல்வர்கள், அமைச்சர்கள், முப்படை தளபதி உள்ளிட்ட பல தலைவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனர். அதுபற்றி பார்க்கலாம்.
விஜய் ருபானி (2025): குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் ருபானி கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தார். குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட சிறிது நேரத்தில் இயந்திரக் கோளாறால் விபத்தில் சிக்கிய அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர 241 உயிரிழந்தனர்.
ஜெனரல் பிபின் ராவத் (2021): நாட்டின் முதல் முப்படைத் தளபதியான பிபின் ராவத், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தமிழ்நாட்டின் குன்னூர் அருகே மோசமான வானிலையால் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மனைவி மற்றும் 12 பேர் உயிரிழந்தனர்.
டோர்ஜி காண்டு (2011): அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமானது. அடுத்த சில தினங்களில் சீன எல்லை அருகே அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இதில் டோர்ஜி உயிரிழந்தார்.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி (2009): ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர். கடந்த 2009 செப். 2ம் தேதி பயணித்த ஹெலிகாப்டர் கனமழை காரணமாக வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தார்.
ஓ.பி.ஜிண்டால், சுரேந்தர் சிங் (2005): ஹரியானா மின்துறை அமைச்சர் ஓ.பி.ஜிண்டால், வேளாண் துறை அமைச்சர் சுரேந்தர் சிங் ஆகிய இருவரும் 2005ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பயணம் செய்த ஹெலிகாப்டர் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக உ.பி.யின் சஹாரன்பூரில் விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.
ஜிஎம்சி பாலயோகி (2002): மக்களவை சபாநாயகராக இருந்த ஜிஎம்சி பாலயோகி, கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பயணம் செய்த ஹெலிகாப்டர் ஆந்திராவில் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தார். மோசமான வானிலையே இந்த விபத்துக்குக் காரணம்.
மாதவ் ராவ் சிந்தியா (2001): காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவ ராவ் சிந்தியா, 2001ம் ஆண்டு செப்.30ம் தேதி உ.பி. மாநிலம் மெயின்புரி அருகே விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
சஞ்சய் காந்தி (1980): முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, 1980ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி டெல்லி சப்தர்ஜங் விமான நிலையம் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.



