இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று பிற்கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1-2 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு கான்பெராவில் நடைபெறுகிறது.
இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. அவரது தலைமையில் இந்திய அணி அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. முதல் பந்தில் இருந்தே அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளனர். இதன் பலனாக சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 29 ஆட்டங்களில் 23 வெற்றிகளை குவித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இதுவரை இருதரப்பு டி 20 தொடரை இழந்தது இல்லை. கடைசியாக இந்திய அணி ஆசிய கோப்பை டி 20 தொடரில் பட்டம் வென்றிருந்தது. அந்தத் தொடரில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி 15, டி 20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. இதன் தொடக்கமாக தற்போது ஆஸ்திரேலியத் தொடர் அமைந்துள்ளது. இந்தத் தொடர் டி 20 உலகக் கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கான சவாலை இந்திய அணிக்கு கொடுக்கக்கூடும்.
எனினும் நடப்பு ஆண்டில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கில் பெரிய அளவில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு 18 இன்னிங்ஸ்களில் விளையாடி 156 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 733 ரன்களை குவித்து மிரட்டியிருந்தார் சூர்யகுமார் யாதவ். இதில் 2 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும். தொடர்ந்து 2024-ம் ஆண்டு 151 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 450 ரன்கள் சேர்த்தார். ஆனால் நடப்பாண்டில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 100 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சராசரி வெறும் 11 ஆக மட்டுமே இருக்கிறது.
எனினும் சூர்யகுமார் யாதவின் ஸ்ட்ரைக் ரேட் 105-க்கு மேல் உள்ளது. இது அவர் ரன்களுக்காகப் போராடிய போதிலும், தனது தாக்குதல் நோக்கத்தை முற்றிலுமாக கைவிடவில்லை என்பதையே உணர்த்துகிறது. ஆசியக் கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடி ரன்வேட்டை நிகழ்த்திய தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவுக்கு, ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் காணப்படும் கூடுதல் பவுன்ஸை சமாளிப்பது சவாலாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
இதனாலேயே சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பந்தின் வேகம், பவுன்ஸ்களை பயன்படுத்தி ஸ்டெம்புகளுக்கு பின்னால் விளாசும் சூர்யகுமார் யாதவின் ஷாட்களுக்கு இம்முறை பலன் கிடைக்கக்கூடும். ஏனெனில் போட்டி நடைபெறும் கான்பெரா மனுகா ஓவல் மைதானத்தில் பந்துகள் நன்கு பவுன்ஸ் ஆகும். எனினும் டெஸ்ட் போட்டிக்கான நீளத்தில் பந்து வீசும் ஜோஷ் ஹேசில்வுட் ஆஃப் ஸ்டெம்ப் திசைகளை குறிவைத்து வீசி அழுத்தம் கொடுக்கக்கூடும்.
பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா பலம் சேர்க்கக்கூடும். அவருடன் சுழலில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் அதிரடி பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். ஆஸ்திரேலியாவின் புதிய டி 20 நட்சத்திரமான மிட்செல் ஓவன் மீது எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் அடிலெய்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மிட்செல் ஓவன் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு மிட்செல் ஓவனின் அதிரடி பேட்டிங் திறமையை நிச்சயமாக சோதிக்கும்.
10-ல் 8 வெற்றி: சர்வதேச டி 20 போட்டிகளில் சமீபகாலமாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஆதிக்கம் செலுத்து வருகின்றன. இரு அணிகளுமே தங்களது கடைசி 10 டி 20 ஆட்டங்களில் தலா 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தலா ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி மோதிய ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. இந்திய அணி மோதிய ஒரு ஆட்டம் ‘டை’ ஆகியிருந்தது.














