நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்தின் 5-வது தளத்தின் ஓர் அறையிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு திடீரென புகை வெளியேறியது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர்கள் காளீஸ்வரன் (23), சபரிநாதன் (24) ஆகியோர் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.
உடனே அவர்கள் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த எழும்பூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக அணைத்தனர்.
தீ விபத்தில் அங்கிருந்த கணினிகள், பிரின்டர், ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.
