கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவன அலுவலகம், அதன் இயக்குநர் வீடு மற்றும் டெல்லியில் உள்ள 4 இடங்கள் உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2020-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
குறிப்பாக இந்த முறைகேட்டில் பயனடைந்ததாக சந்தேகிக்கப்படுபவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினருமான திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த சூழலில், கொல்கத்தாவின் சால்ட்லேக் பகுதியில் உள்ள, அரசியல் ஆலோசனை வழங்கும் ஐ-பேக் நிறுவன அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர் பிரதிக் ஜெயின் வீடு மற்றும் டெல்லியில் உள்ள 4 இடங்கள் உட்பட மொத்தம் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர்.
மம்தா மீது புகார்: இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், “பிரதீக் ஜெயின் வீட்டில் சோதனை நடத்தியபோது, இங்கு தனது உதவியாளர்களுடன் வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, சில ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை எடுத்துச் சென்றார்.
இதுபோல, சால்ட்லேக் பகுதியில் உள்ள ஐ-பேக் அலுவலகத்துக்கு தனது உதவியாளர்களுடன் வந்த மம்தா, அங்கிருந்த சில ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை எடுத்துச் சென்றார்” என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சிக்கு ஐ-பேக் நிறுவனம் வியூகம் அமைத்துக் கொடுத்தது. அத்துடன் கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் ஊடக செயல்பாடுகளை கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





