நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.
ஊட்டி அருகேயுள்ள சின்னகாடி மந்தையில் வசிக்கும், தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தால் குட்டன் (58) என்பவர் நேற்று முன்தினம் இரவு காடி மந்துக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பாததால், பல இடங்களிலும் தேடினர்.
இந்நிலையில், நேற்று காலை காடிமந்து அருகேயுள்ள வனப் பகுதியில் அவரது உடல் கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவரது உடலில் விலங்குகள் தாக்கிய காயங்கள் இருந்தன. புலி தாக்கியதால் அவர் உயிர் இழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காட்டு விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு மக்கள் தேவையின்றிச் செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு கல்லக் கொரைமந்து பகுதியில் புலி தாக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். புலியைப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பழங்குடியின மக்கள் அப்போது போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புஸ்தால் குட்டன் உடலைப் பெற மாட்டோம் என்று கூறி, 100-க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடி இனமக்கள் ஊட்டியிலிருந்து, கேரளா, கர்நாடகா செல்லும் கூடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நீலகிரி வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலர்கள் மணிமாறன், சரகர் ராம் பிரசாத், ஏடிஎஸ்பி மணிகண்டன், டிஎஸ்பி நவீன்குமார் ஆகியோர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, முதியவரின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறும்போது, “முதியவரை தாக்கிக் கொன்ற புலியை உடனடியாக கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் அகழிகள் அமைத்து, ஊருக்குள் யானைகள் நுழையாதவாறு தடுக்க வேண்டும்” என்றனர்.













