ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரும், மூத்த கல்வியாளருமான எஸ்.எஸ்.ராஜகோபாலன் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணாமாக, சென்னை, கோடம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் காலமானார். ராஜகோபாலனின் விருப்பப்படி அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த கல்வியாளர் ராஜகோபலான் கடந்த 1950-ம் ஆண்டு அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து 40 ஆண்டு கால பணிக்கு பிறகு, 1990-ல் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. கருணாநிதி முதல்வராக இருந்த போது நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர்க் கல்விக்கான குழுவின் உறுப்பினராக இருந்து பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை ராஜகோபாலன் வழங்கினார்.
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு கல்வி உரிமைக்காகவும் தரமான கல்விக்காகவும் தொடர்ந்து போராடி வந்தார்.
ராஜகோபாலனின் மறைவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆசிரியராக தமது கல்விப் பணியைத் தொடங்கிய அவர் தமிழக அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அவரது மறைவு கல்வித் துறைக்குப் பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ராஜகோபாலன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.



