Home தேசிய செய்திகள் டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் திரவுபதி முர்மு | 77-வது குடியரசு தின விழா கோலாகலம்

டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் திரவுபதி முர்மு | 77-வது குடியரசு தின விழா கோலாகலம்

0

நாட்டின் 77-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. தேசத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்றது.

நாட்டின் 77-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. குதிரைப் படை சூழ சாரட் வாகனத்தில் விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர்களாக இந்த விழாவில் பங்கேற்ற ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் இதில் பங்கேற்றனர். இந்த விழாவில் 21 குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிட்டார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை இசைக்க கலைஞர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ராணுவம், கடற்படை, விமானப் படை, சிஆர்பிஎஃப் படை வீரர்கள், என்சிசி, என்எஸ்எஸ் படை அணிவகுத்தன. பின்னர் மத்திய அரசின் 13 துறைகள் மற்றும் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன.

இதில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய பிரதான ஆயுத அமைப்பின் மாதிரி வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 30,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version