2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் நேற்று நடந்தது. முன்னதாக, உயர்மட்ட மேம்பாலம் கட்ட கோரிக்கை எழுந்துள்ள கொளத்தூரை அடுத்த கோட்டையூரிலும், செட்டிப்பட்டியில் புதிய நீரேற்று திட்டம் அமையவுள்ள இடத்திலும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: சேலம் மாவட்டம் கோட்டையூர் – தருமபுரி மாவட்டம் ஒட்டனூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவேண்டும் என்பது மக்களின் 75 ஆண்டு்கால கோரிக்கையாகும். இது தொடர்பாக 2022-ல் முதல்வர் அறிவிப்பு வெளியானது.
இந்த மேம்பாலம் கட்ட ரூ.600 கோடி வரை செலவாகும். இந்தப் பாலத்தை ஒருமுறை கட்டினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை மீதமாகும். 45 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை செய்துவிட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். திமுக அரசு அறிவிப்பை மட்டும்தான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் புதிதாக 30 மணல் குவாரிகளை தொடங்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பெரிய ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளக் கூடாது என்று கூறுபவர்கள், கள்ள வாக்குகள் செலுத்துவதற்கு உடந்தையாக இருப்பவர்கள்தான்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறவிருப்பது அனைத்துக் கட்சி கூட்டம் கிடையாது. திமுக கூட்டணி கூட்டம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். இவ்வாறு அன்புமணி கூறினார்.














