கரூரில் கடந்த செப். 27 அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து இரு மாதங்களாக பொதுக்கூட்டங்கள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. வரும் 16-ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு பொதுக்கூட்டத்துக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, புதுச்சேரி உப்பளம் துறைமுகம் மைதானத்தில் நேற்று காலை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. மைதானத்தில் பிரச்சார வேனின் மேல்பகுதியில் நின்றபடி விஜய் பேசினார். அவர் பேசியதாவது: மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம்; புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். நமக்கு அப்படி இல்லை. தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான், நாமெல்லாம் சொந்தம்தான். நமக்குள் இருக்கும் இந்த பாச உணர்வு போதும்; வேறு எதுவும் தேவையில்லை.
அரசியல் என வரும் போது ஒரு முக்கிய விஷயத்தை சொல்ல வேண்டும். 1977-ல் தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சி அமைத்தார். ஆனால், அதற்கு முன்பே 1974-ல் புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைந்தது. ‘நமக்காக வருகிறார் எம்ஜிஆர், அவரை மிஸ் பண்ணிடாதீங்க!’ என அலர்ட் செய்தது புதுச்சேரி. அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மால் மறக்க முடியுமா?
தமிழகம் போல புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடிக்கிறீர்கள். இந்த விஜய், தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான் என நினைக்காதீர்கள், அப்படிச் செய்தால் அது தவறு. புதுச்சேரி மண்ணுக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பேன். அது என் கடமை. தமிழகத்தில் உள்ள திமுக அரசு போல புதுச்சேரி அரசு கிடையாது.
வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன் எழுச்சியாக வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. இந்த புதுச்சேரி அரசுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் மனப்பூர்வமான நன்றி. இதைப் பார்த்தாவது தமிழக திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாயிருக்கும்.
ஆனால், அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள், அதை நம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். புதுச்சேரி மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள். நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் திமுகவின் வேலை.
புதுச்சேரியில் கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை என உங்களுக்கு நன்றாக தெரியும். புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமா கண்டுகொள்ளவில்லை, வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை. ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்’ என சட்டப்பேரவையில் பல முறை தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
பல கோரிக்கைகளை தீர்க்க புதுச்சேரி அரசுக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் உண்மையாக துணை நிற்க வேண்டும். தமிழகத்தை ஒதுக்குவது போல புதுச்சேரியையும் ஒதுக்கக் கூடாது. 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய யூனியன் நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. இதனால் மாநில நிதி பகிர்வு, யூனியன் நிதி பகிர்வு ஒதுக்கவில்லை.
தோராயமாகவே மத்திய அரசு புதுச்சேரிக்கு நிதி விடுவிக்கிறது. இந்த நிதியும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதிய திட்டங்களுக்கே செல்கிறது. எஞ்சிய தேவைக்கு வெளிச்சந்தையிலும், கடன் பத்திரங்கள் மூலமும் புதுச்சேரி அரசு கடன் வாங்குகிறது. இந்த நிலைமை மாற மாநில அந்தஸ்துதான் ஒரே வழி. இது புதுச்சேரி மக்களின் பல்லாண்டு கால கோரிக்கை.
புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாததால், வெளியே கடன் வாங்க வேண்டியதாக உள்ளது. கடனை குறைத்து தற்சார்பு திட்டங்கள் வகுக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற்றால் மட்டுமே போதாது, தொழில் வளர்ச்சியும் தேவை. புதுச்சேரி தென்னிந்தியாவின் முன்னணி தொழில்மையமாக மாற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
மீன்பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கை கடற்படை, படகுகளையும் பறிமுதல் செய்கிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், படகுகள் கிடைக்காமல் மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். மறுபடியும் சொல்கிறேன். இந்த விஜய், புதுச்சேரி மக்களுக்காகவும் எப்போதும் துணை நிற்பான். வரும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும். நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார்.








