தமிழகத்தில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக தனது வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.
அதன்படி, வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதியில் இ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதியில் எஸ்.சுகன்யா போட்டியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
அதில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரந்தாமன் திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
மூத்த வழக்கறிஞரான இவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது 2-வது முறையாக அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுகன்யாவும் வழக்கறிஞர். திமுகவில் மகளிரணி நிர்வாகியான இவருக்கு, இம்முறை தாராபுரம் தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பு அளித் துள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் இதற்கிடையே, வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் மதுராந்தகத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தருமபுரி மாவட்டச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவரும், தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட ‘தேர்தல் மன்னன்’ என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த கே.பத்மராஜனும் முதல் நபர்களாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
