தென்மாவட்டத்தில் இருந்து வரும் அரசுப் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக துறை சார்பில் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள், கிளாம்பாக்கம், தாம்பரம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன.
அவற்றில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாதவரம் செல்லும் பேருந்துகள் நீங்கலாக மற்ற பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அனைத்து பேருந்து ஓட்டுநர், நடத்துநரும் முறையாக பின்பற்ற வேண்டும். தாம்பரம் பேருந்து நிலையம் வரை பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.