பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. 3 நாட்கள் நீடித்த இந்த மோதல் பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளையடுத்து முடிவுக்கு வந்தது.
அப்போது முதல் இந்தியா பாகிஸ்தான் இடையே தூதரக அளவிலான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இருநாட்டு விமான போக்குவரத்துக்கு எல்லையில் வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தான் மக்கள் இந்தியா வருவதும், சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புனித பயணம் செல்வதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 61 பிரபலங்களும், பாகிஸ்தானைச் சேர்ந்த 56 பிரபலங்களும் இணைந்து அமைதி மற்றும் முன்னேற்ற மையம்’ என்ற பெயரில் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “இரு நாடுகள் இடையே மீண்டும் சுமுக உறவு ஏற்பட தூதர்களை மீண்டும் நியமிக்க வேண்டும். விசா சேவைகளைத் தொடங்கி, வான்வெளியை திறந்து விட்டு இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
