அரசியல் சாசன வெற்று நகலை விநியோகித்து அம்பேத்கரை அவமரியாதை செய்த காங்கிரஸ்: பாஜக குற்றச்சாட்டு

0
196

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பேரணியில் அரசியல் சாசன வெற்று நகலை விநியோகம் செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு கடுமையான அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெக்சாத் பூனாவாலா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர மநிலம் நாக்பூர் நகரத்தில் ராகுல் காந்தி நடத்திய அரசியலமைப்பு சாசன மரியாதை மாநாட்டில் வெற்று நகல் புத்தகம் விநியோகிக்கப்பட்டது. இது, அக்கட்சியின் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுலின் இந்த செயல் அம்பேத்கரை அவமதிப்பதாகும். இதன்மூலம், இட ஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அரசியலமைப்பு சாசனத்தையும், அம்பேத்கரையும் அவமதிப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான அடையாளம்.

அரசியலமைப்பு மரியாதை மாநாட்டில் காங்கிரஸ் வழங்கிய அரசியல் சாசன புத்தகத்தின் கவர் சிவப்பு. ஆனால், வழக்கம்போல் நீலநிறத்தை அக்கட்சி மறந்துவிட்டது. உள்ளே அனைத்தும் வெறுமையான வெள்ளைக் காகிதம் மட்டுமே . இதிலிருந்து, அவர்கள் அந்த புத்தகத்தின் மீதும், அம்பேத்கர் மீதும் எவ்வளவு மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறார்கள், உண்மையில் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது .

அம்பேத்கரை அவர்கள் இதுபோன்று அவமதிப்பது செய்வது இதுஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே, தேர்தலில் அம்பேத்கர் போட்டியிட்டபோது இருமுறை அவரை தோற்கடித்து மகிழ்ச்சியடைந்தனர். கடந்த 1961-ம் ஆண்டில் இடஒதுக்கீட்டை எதிர்த்து நேருவே உரையாற்றியுள்ளார். அதேபோன்று, கடந்த காலங்களில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை இந்திரா, ராஜீவ் எதிர்த்ததும் வரலாறு. இவ்வாறு பூனாவாலா தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பரில் 20-ல் நடத்தப்பட்டு, 288 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ல் நடைபெறுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில், பாஜக 105, சிவசேனா 56, காங்கிரஸ் 44 இடங்களை பிடித்தன. 2014-ல் பாஜக 122, சிவசேனா 63, காங்கிரஸ் 42 இடங்களில் வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here