கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் வெள்ளை நிற உடைகளில்தான் வீரர்கள் விளையாடினார்கள். ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் வண்ண சீருடைகளில் விளையாடுகிறார்கள். இந்த மாற்றத்துக்கு பின்னர் பெரிய கதையும், போராட்டமும் உள்ளது. 1970-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சி பெட்டி (டி.வி) கருப்பு வெள்ளையில் இருந்து வண்ண நிறத்துக்கு மாறியது. அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மீடியா நிறுவனரான கெர்ரி பேக்கர் சேனல் 9 என்ற சேனல் நடத்தி வந்தார்.
அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை அணுகி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமம் கோரினார். வழக்கமான தொகையைவிட 8 மடங்கு அதிகம் வழங்குவதாக கூறினார். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒளிபரப்பு உரிமத்தை கொடுக்க மறுத்தது. ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே அரசு நடத்தி வரும் ஏபிசி சேனலுக்கு 20 ஆண்டுகள் அடிப்படையில் உரிமம் வழங்கியிருந்தனர்.
மேலும் தனியாரிடம் ஒளிபரப்பு உரிமத்தை வழங்கினால் அவர்கள் வியாபார ரீதியில் மட்டுமே செயல்படுவார்கள், அது மக்கள் மத்தியில் கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கருதியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த கெர்ரி பேக்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக 1977-ல் ‘வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டியை நடத்தினார்.
இதில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கி ஒப்பந்தம் செய்தார். மற்ற தொடர்களைவிட அதிகளவிலான தொகை வழங்கப்பட்டதால் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடினார்கள். இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிருப்தி அடையத் தொடங்கியது.
இதையடுத்து வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் தொடரை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்கள் ஐசிசி நடத்தும் தொடர்களில் விளையாட முடியாது எனவும், மேலும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் மிரட்டியது. இதை எதிர்த்தும் வீரர்களின் நலனுக்காவும் கெர்ரி பேக்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போட்டிகளில் கலந்துகொள்வது வீரர்களின் உரிமை, அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் கிரிக்கெட்டை தவிர்த்த மற்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள், இதனால் அவர்களின் நலனுக்காகவே வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது என தனது வாதத்தை முன்வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் தொடரில் வீரர்களுக்கு பங்கேற்பதற்கு தடை விதிக்கக்கூடாது என உத்தரவிட்டது. ஆனால் ஐசிசி இந்த விவகாரத்தை எளிதாக விடவில்லை. வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு மைதானங்களை வழங்கக்கூடாது என அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும் மறைமுகமாக உத்தரவிட்டது. ஆனால் கெர்ரி பேக்கரோ, 2 கால்பந்து மைதானங்களை குத்தகைக்கு எடுத்து போட்டிகளை நடத்தினார்.
இந்த மைதானத்தில் வெளியில் இருந்து தயார் செய்யப்பட்ட ஆடுகளத்தை (டிராப் இன் பிட்ச்) கொண்டு வந்து பொருத்தினார்கள். இந்த வகையிலான ஆடுகளத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது கெர்ரி பேக்கர்தான். டி.வி.யில் பிரைம் டைமை கணக்கு வைத்து போட்டிகளை பகலிரவாக மின்னொளியில் நடத்தினார். இதற்காக வெள்ளை நிற பந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும் பல்வேறு அணிகள் விளையாடியதால் வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காகவும் வியாபார ரீதியாகவும் வெள்ளை சீருடைகளை நீக்கிவிட்டு வண்ண சீருடைகளை அறிமுகம் செய்தார். கால் காப்பு, கையுறைகளும் வண்ண நிறங்களில் மாறின.
போட்டிகளை பிரத்யேகமாக ஒளிபரப்பு செய்வதற்காக மைதானத்தை சுற்றிலும் 6 கேமராக்களை பயன்படுத்தினார். இந்த போட்டிகள் பார்ப்பதற்கு புதிதாகவும், பிரம்மாண்டாகவும் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. போட்டிகளை காண மைதானத்துக்கு பெருமளவில் குவியத் தொடங்கினார்கள். இதனால் டி.வி. ரேட்டிங் அதிகரித்தது. ஆனால் இந்தத் தொடருக்காக கெர்ரி பேக்கர் பெரிய அளவில் செலவு செய்ததால் எதிர்பார்த்த அளவில் வருமானத்தை ஈட்ட முடியவில்லை.
இது ஒருபுறம் இருக்க வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் தொடரால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. இதையடுத்து கெர்ரி பேக்கருடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒளிபரப்பு உரிமத்தை வழங்க சம்மதம் தெரிவித்தது. கெர்ரி பேக்கரும் வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் தொடரால் மேலும் நஷ்டம் அடைவதை தவிர்க்கும் வகையில் அந்தத் தொடரை கைவிட்டார்.
அதேநேரத்தில் அவர், நினைத்தபடி கிரிக்கெட்டில் பெரிய மாற்றம் கொண்டு வந்தார். தற்போது கிரிக்கெட் ரசிக்கிற மாதிரி இருப்பதற்கும், பல்லாயிரக்கணக்கான கோடிகளில் வியாபாரங்கள் நடைபெறுவதற்கும், வீரர்கள் கோடிகளில் சம்பளம் பெறுவதற்கும், அங்கீகாரம் கிடைத்தற்கும் கெர்ரி பேக்கரும் ஒரு முக்கிய காரணம். அவர், கொண்டுவந்த மாற்றங்களே ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டன. இது டி20 போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் பாரம்பரியான முறையில் டெஸ்ட் போட்டிகள் மட்டும் வெள்ளை சீருடையில் விளையாடப்பட்டு வருகின்றன.