தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பொது பார்வையாளர்கள் 136 பேர், செலவின பார்வையாளர்கள் 150 பேர், காவல் பார்வையாளர்கள் 40 பேர் என 326 பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு செலவின பார்வையாளர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ள மத்தியப் பார்வையாளர்களுக்கான (பொது, காவல் மற்றும் செலவினப் பார்வையாளர்கள்) ஆய்வுக் கூட்டம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் மத்திய பார்வையாளர்கள் 327 பேர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவுறுத்தியதாவது: எவ்வித வன்முறையுமின்றி, திருவிழா மனநிலையோடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்படுவதை மத்திய பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். விதிமீறல்கள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறையான பயிற்சி
பார்வையாளர்கள் தங்களது தொடர்பு எண்களையும், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்களிடமிருந்து புகார்களை பெறுவதற்கான இடம் மற்றும் நேரத்தையும் நன்கு விளம்பரப்படுத்த வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சிகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை மேற்பார்வையிட வேண்டும்.
இணையவழி ஒளிபரப்பு
வாக்குச்சாவடிகளில் கைபேசியை பாதுகாப்பாக வைக்கும் வசதி மற்றும் வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள் அமர்வதற்கான வசதி உள்ளிட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதுமான குடிநீர் மற்றும் நிழல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
இணையவழி ஒளிபரப்பு (Webcasting) கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்பாடுகள் முறையாகச் சரிபார்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.














