பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலம் அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓஎம்ஆர் சாலை பகுதியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வரும் மேம்பால மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் திட்ட அமலாக்கத்தில் தேவைப்படும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மேம்பாலங்களை அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை, வைப்புத்தொகை அடிப்படையில் மெட்ரோ நிறுவனத் திடம் ஒப்படைத்துள்ளது.
அதன்படி, பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ராஜ்குமார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன், எம்.ராஜ்குமார் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ராஜ்குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பணி தொடங்கிய நாளில் இருந்து 18 மாதங்களுக்குள்,முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது.
பெருங்குடி சந்திப்பில் அமையவுள்ள இந்த மேம்பாலமானது, எம்ஜிஆர் பிரதான சாலையிலில் இருந்து ஒரு பிரத்யேக சாய்வுப் பாதையை கொண்டிருக்கும். இது சோழிங்க நல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தடையின்றி வலதுபுறம் திரும்புவதற்கு வழிவகை செய்யும்.
அதேபோல, எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பில் அமையவுள்ள இந்த மேம்பாலம், ஓஎம்ஆரில் இருந்து வேளச்சேரி – தரமணி இணைப்புச் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எவ்விதத் தடையுமின்றி வலதுபுறம் திரும்புவதற்கு வழிவகை செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.














