காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிந்து பலரை கைது செய்தது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் என்ஐஏ நேற்றுமுன்தினம் 1,597 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சுபம் திவிவேதி என்பவரும் உயிரிழந்தார்.
இந்நிலையில், என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு, சுபமின் தந்தை சஞ்சய் மற்றும் சுபமின் இளம் மனைவி அய்ஷன்யா திவிவேதி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சஞ்சய் கூறும்போது, ‘‘மத்திய அரசு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டும். நாட்டு மக்களும் தீவிரவாதத்துக்கு எதிராக இருக்க வேண்டும்’’ என்றார்.
சுபமின் மனைவி அய்ஷன்யா திவிவேதி கூறும்போது, ‘‘நமது மத்திய அரசுக்கும், ராணுவம், என்ஐஏ.வுக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றப்பத்திரிகையில் தீவிரவாதிகளுக்கு உதவி, ஆதரவளித்த காஷ்மீரிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.







