Home மாநில செய்திகள் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

0

சென்னை: தமிழகத்தில் இன்று திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு அரபிக் கடலில் கர்நாடகா– கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. இது, அடுத்த சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வரும் 12-ம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தமிழகத்தில் இன்று (அக்.11) திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (அக்.12) திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version