தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் (முன்பு ஆந்திரா வங்கி) வாங்கிய ரூ.228 கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி, இந்தக் கடனை வாராக் கடனாக வகைப்படுத்தியது. மேலும் இது தொடர்பாக யூனியன் வங்கி சார்பில் சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வங்கியில் பெற்ற கடனை உரிய நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் வேறு வகையில் முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, ஆர்எச்எப்எல், அதன் இயக்குநர்களான அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோல், ரவீந்திரா சரத் சுதாகர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.







