வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

0
287

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போது இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை வீரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் டிசம்பருடன் முடிவடைகிறது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்
திடம் பட்டியல் கோரியுள்ளது. ஆனால் எம்.பி., எம்எல்ஏ-க்களைதேர்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியலிலேயே பல்வேறு குளறுபடிகள் இருந்தன.

எனவே கள்ள ஓட்டுக்களை தவிர்க்கும் வகையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போது இறந்தவர்கள் மற்றும் இடம் மாறிச்சென்றவர்களின் பெயர்களை நீக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளி்க்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.28-க்கு தள்ளிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here