Home உலக செய்திகள் ஐரோப்பாவை உலுக்கும் கொடூர வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு

ஐரோப்பாவை உலுக்கும் கொடூர வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு

0

ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த ஜூன் 21 முதல் வீசி வரும் இந்த அதீத வெப்பத்தின் காரணமாக ஐரோப்பா முழுவதும் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது. இதில் பிரான்சில் மட்டும், வெப்பம் உச்சத்தில் இருந்த மூன்று நாட்களில் வழக்கமான மரணங்களை விட 1,000 கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் விடுத்துள்ள அறிக்கையில், “உலகளாவிய சராசரியை விட இரண்டு மடங்கு வேகத்தில் ஐரோப்பா வெப்பமடைந்து வருகிறது. தற்போது அங்கு 15 கோடி மக்கள் கடுமையான வெப்பச் சூழலில் தவித்து வருகின்றனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டமைப்பு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது” என்று கவலை தெரிவித்துள்ளார். 

மேலும், ஜெர்மனியில் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாகப் பகல் நேரத்தில் 41.5 டிகிரி செல்சியஸும், இரவில் 29.4 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பெர்லின் நகரில் வெப்ப நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சனிக்கிழமை அன்று மட்டும் கூடுதலாக 500 ஆம்புலன்ஸ் அவசர அழைப்புகள் வந்துள்ளன. இதனால் பொதுமக்களைக் குளிர்விக்கப் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களை வீதிகளில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த அதீத வெப்பத்தின் விளைவாக ஜெர்மனி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் காடுகளில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. குறிப்பாக ஜெர்மனியின் கோரிஷ்ஹெய்ட் மற்றும் ட்ரைசென் காட்டுப் பகுதிகளில், இரண்டாம் உலகப் போர்க் காலத்தைச் சேர்ந்த வெடிக்காத வெடிமருந்துகள் ஆங்காங்கே வெடிப்பதால் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் பெரும் ஆபத்தைச் சந்தித்து வருகின்றனர். 

வெப்பத்தின் தாக்கத்தால் நெடுஞ்சாலைகளின் கான்கிரீட் பரப்புகள் உருகி விரிசலடைந்துள்ளன. ஹாம்பர்க்கில் இருந்து ப்ராக் சென்ற ரயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஏசி வேலை செய்யாததால் 600-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஹங்கேரியின் பாக்ஸ் அணுமின் நிலையம் மற்றும் இத்தாலியின் போ நதி ஆகியவற்றிலும் நீர்மட்டம் மற்றும் வெப்ப நிலை மாறுபாட்டால் விவசாயமும் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெப்ப அலையினால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கலாம் என பிரான்ஸ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version