ஹைதராபாத்தை சேர்ந்த பீபிள் பல்ஸ் நிறுவனம் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 10 ஆயிரத்து 481 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் முடிவுகளை தொகுத்து வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 48.4% பேர் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு சித்தராமையா முதலிடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த இடங்களில் டி.கே.சிவகுமார், எடியூரப்பா, விஜயேந்திரா (எடியூரப்பாவின் மகன்), பசவராஜ் பொம்மை ஆகியோர் உள்ளனர்.
இதேபோல அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 58% பேர் பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். மொத்தமுள்ள 224 இடங்களில் பாஜக 136 முதல் 159 இடங்களை கைப்பற்றும். இதன் மூலம் தனி பெரும்பான்மை பெற்று பாஜக தனித்து ஆட்சியை அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
காங்கிரஸுக்கு 62 முதல் 82 இடங்கள் கிடைக்கும். மஜதவின் வாக்கு சதவீதம் 18-ல் இருந்து 6 சதவீதமாக குறையும். இதன் மூலம் அக்கட்சி 3 முதல் 6 இடங்களிலேயே வெற்றிப்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.