கர்நாடக சட்டப்பேரவை கடந்த 22ம் தேதி கூடியபோது ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஆளுநரை சூழ்ந்துக்கொண்டு கூச்சல் போட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கர்நாடக பாஜக, மஜத எம்எல்ஏ.க்கள், எம்எல்சி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆளுநருக்கு ஆதரவாகவும், காங்கிரஸாருக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர்.
ஆர்.அசோகா பேசும்போது, “காங்கிரஸார் மரபை மீறி, நாகரிகமற்ற முறையில் செயல்பட்டனர். சட்டப்பேரவையில் அவர்களின் நடவடிக்கை ஆட்சேபத்துக்குரிய வகையில் அரங்கேறியுள்ளது. ஆளுநரை அவமதித்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை பேரவைத் தலைவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றார்.



