ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் கடந்த சில வாரங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல் அணிகளுக்கான பயிற்சி வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து அணிகளுக்கும் 5 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ அனுப்பிவத்துள்ளது. இதன்படி எதிரணிகள் தங்களது வலைப்பயிற்சியின் போது பயன்படுத்திய அதே பயிற்சி ஆடுகளத்தில் மற்ற அணிகள் இனி பயிற்சி பெற அனுமதி கிடையாது.
ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி நேரத்தில் புதிய வலை பயிற்சி ஆடுகளத்திலேயே விளையாட வேண்டும். இரண்டு அணிகள் அடுத்தடுத்து பயிற்சி மேற்கொண்டால், முதல் அணி பயன்படுத்திய வலைகளை இரண்டாவது பயிற்சி பெறும் அணி பயன்படுத்தக்கூடாது. இந்தத் தடை ‘த்ரோடவுன்’ மற்றும் ‘ரேஞ்ச்-ஹிட்டிங்’ பயிற்சிகளுக்கும் பொருந்தும்.
ஒரு அணி தனது பயிற்சியை முன்கூட்டியே முடித்துக்கொண்டாலும், மற்றொரு அணி அந்தப் பயிற்சி ஆடுகளத்தைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. பிரதான மைதானத்தின் மையப்பகுதியில் பயிற்சிப் போட்டிகளை நடத்தக்கூடாது என்பதையும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
ஆடுகளத்தைத் தயார் செய்யும் நோக்கில், சம்பந்தப்பட்ட அணியின் முதல் உள்ளூர் போட்டிக்கு முந்தைய 4 நாட்களில், மையப்பகுதியில் எந்தவிதப் பயிற்சியோ அல்லது பயிற்சிப் போட்டிகளோ நடத்தக்கூடாது இந்தக் காலக்கட்டத்தில், அந்த அணி வேண்டுகோள் விடுத்தால், மாநில கிரிக்கெட் சங்கம் அந்த அணிக்கு எந்தவிதக் கட்டணமுமின்றி மாற்றுப் பயிற்சி மைதானத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வரும் 16-ம் தேதி முதல், சீசனின் தொடக்க ஆட்டத்துக்கு முன்னதாக வரை அணிகளுக்கு பயிற்சி பகுதியில் இரண்டு வலை பயிற்சி ஆடுகளங்களும், பிரதான மைதானத் தில் ‘ரேஞ்ச் ஹிட்டிங்’ பயிற்சிக்காக ஒரு வலை ஆடுகளமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














