வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாட்டின் கிரிக்கெட் டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடி வருபவர் நயீம் ஹசன். இவர் இதுவரை 14 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 26 வயதாகும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டாக்கா விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸார் ஆட்டோவை வழிமறித்து நயீம் ஹசனை கடுமையாக தாக்கியுள்ளனர். தான் ஒரு கிரிக்கெட் வீரர் என்று கூறியபோதும் அவரை போலீஸார் அடித்துள்ளனர். மேலும், காவல் நிலையத்துக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த விவரம் அறிந்ததும், வங்கதேச கிரிக்கெட் வாரியமும், சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
