ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலுள்ள பாலேஸ்வரி மாதா தேவி சிலைக்கு பக்தர்கள் ரூ.51 லட்சம் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்து உள்ளனர். புவானா பகுதியில் பிரசித்தி பெற்ற பாலேஸ்வரி மாதா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்புடைய கரன்சி நோட்டுகளால் நேற்று முன்தினம் பக்தர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்டுகளால் இந்த அலங்காரம் நடைபெற்றதாக கோயிலை நிர்வகிக்கும் பாலேஸ்வர் யுவ மண்டல் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்த அலங்காரத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக பக்தர்களிடமிருந்து நன்கொடையை கோயில் நிர்வாகம் பெற்று வந்தது. முதலாண்டில் அம்மனுக்கு ரூ.11,11,111 மதிப்புடைய நோட்டுகளால் அலங்காரமும், 2-ம் ஆண்டில் ரூ.21,21,121 மதிப்புடைய நோட்டுகளால் அலங்காரமும், 3-ம், ஆண்டில் ரூ.31,31,131 மதிப்புடைய நோட்டுகளால் அலங்காரமும் நடைபெற்றது. தற்போது 4-ம் ஆண்டாக ரூ.51,51,151 மதிப்புடைய நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.