உலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான டிரா நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் ஒற்றையர் பிரிவில் கலந்துகொள்ளும் 8 வீரர்களும் இரு பிரிவுளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பிஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிவில் கடைசி வீரராக இடம் பெறுவதில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி ஆகியோர் இடையே போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய நிலையில் 8-வது இடத்தில் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் உள்ளார். ஆனால் இந்த வார இறுதியில் முடிவடையும்ஏதன்ஸ் டென்னிஸ் தொடரில் லோரென்சோ முசெட்டி கோப்பையை வென்றால் டென்னிஸ் தரவரிசையில் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை பின்னுக்குதள்ளி 8-வது இடத்தை கைப்பற்றுவார்.
இரு பிரிவிலும் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறுவார்கள். இறுதிப் போட்டி 16-ம் தேதி நடைபெறுகிறது.














