செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த மாநாட்டின் 2-வது நாளான நேற்று பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன. மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். டெல்லி மாநாட்டின் ஒரு பகுதியாக பாரத் மண்டபத்தில் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. இதில் புதிய சிந்தனைகள், புதுமையான கண்டுபிடிப்புகள் இடம் பெற்றுள்ளன.
உலகின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவை வடிவமைப்பதில் இந்திய நிபுணர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்களின் திறமை, புதுமை கண்டுபிடிப்புகள் டெல்லி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. செயற்கை நுண்ணறிவை மிகுந்த பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாபாரதத்தில் அறிவு, ஞானம் தொடர்பாக கூறப்பட்டிருக்கும் வாசகங்களின் ஆடியோவையும் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
“புதியவைகளை அறிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். அவற்றை உன்னிப்பாக கேட்டறிய வேண்டும். ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றை மீண்டும் நினைவுகூர வேண்டும். தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். முழுமையான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒன்றிணைந்திருப்பதே ஞானம்” என்று ஆடியோவில் கூறப்பட்டு உள்ளது.
டெல்லி ஏஐ உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பல்வேறு முக்கிய அரங்குகளை அவர் பார்வையிட்டார். இவை தொடர்பான வீடியோவையும் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.














