உறவினரின் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்த ராணுவ வீரரை ஒரு கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள முடிகெடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ராந்த் குர்ஜார். இவர் ஜம்மு-காஷ்மீர் செக்டாரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் உறவினர் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிப்பதற்காக 4 நாட்கள் விடுமுறையில் கடந்த செவ்வாயன்று சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இரவு உணவை முடித்துவிட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலைக்கு இடையில் நடந்துள்ளது. கிராம மக்கள் அவரது உடலை பார்த்து குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தலை, மார்பில் குண்டுகள் பாய்ந்துள்ளன. இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.