லஞ்சப் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். சென்னை காவல் துறையில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜலட்சுமி.
இவர் குடும்பத்தோடு சென்னை திருமங்கலம், வெல்கம் காலனியில் வசித்து வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் இவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேர சோதனைக்குப் பிறகு சில ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. முன்னதாக சொத்து விவரங்கள், பண விவகாரங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர், ராஜலட்சுமியிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தினர்.
தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்பதாக கூறிச் சென்றனர். சோதனையின் முடிவில் எவ்வளவு பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது எந்த விவரங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெளியிடவில்லை.
இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது முறைகேடு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, பாலியல் தடுப்புப் பிரிவில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் லஞ்ச விவகாரங்கள் தொடர்பாக கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சிலரின் தூண்டுதலின் பேரிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.











