உத்தர பிரதேசத்தின் மகாராஜ் கஞ்ச் மாவட்டம், சோனாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேபாள எல்லையில் மத்திய பாதுகாப்பு படையினர் கடந்த சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நேபாள எல்லைக்குள் நுழைய முயன்ற ஒருவரை மடக்கிப் பிடித்தனர். உ.பி. காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து மகாராஜ்கஞ்ச் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜோர்டான் பிரவுன் என தெரியவந்துள்ளது.
அமெரிக்க கடற்படை முன்னாள் அதிகாரி என்றும் கூறுகிறார். அவரிடம் முறையான அடையாள மற்றும் பயண ஆவணங்கள் எதுவும் இல்லை. சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்ற அவர், அங்கு தனது பாஸ்போர்ட்டை இழந்ததாகவும் கூறினார்.
பிறகு கடல் வழியாக இலங்கை சென்றடைந்து, அங்கிருந்து கடந்த 2025 நவம்பர் 2ம் தேதி கடல் மார்க்கமாக கோவா வந்து அங்கு தங்கியுள்ளார். இதன் மூலம் பாஸ்போர்ட் இல்லாமல் சுமார் 7 மாதங்கள் அவர் இந்தியாவில் கழித்துள்ளார். கோவாவில் இருந்து பெங்களூருவுக்கும் பிறகு அங்கிருந்து நேபாளத்திற்குள் நுழையும் நோக்கத்தில் சோனாலி எல்லைக்கும் வந்துள்ளார்.அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
