அனைத்து மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2009-ல் ‘கலைஞர்’ காப்பீட்டுத் திட்டமாக தொடங்கப்பட்டது. இப்போது ஜனவரி 2022 முதல் 2027 வரையிலான திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மூலம், மருத்துவக் காப்பீட்டு அட்டையை சரிபார்த்து பயனாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அந்தவகையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களும் இணைந்து பயனடையுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு குறைவான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வரையும், உயர் சிகிச்சைக்கான காப்பீட்டு தொகையாக ரூ.22 லட்சம் வரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்திருந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் www.cmchistn.com என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை விவரத்தை உள்ளீடு செய்து பதிவு நிலையை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. புதிதாக பதிவு செய்பவர்கள் தேவையான ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 18004253993 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.