ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பிய வீரர் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறியுள்ளனர். அரை இறுதி ஆட்டத்தில் ஐந்தரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அல்கராஸ் வெற்றி கண்டார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸும், 3-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஜிவேரேவும்(ஜெர்மனி) மோதினர். இதில் அல்கராஸ் 6-4, 7-6(5), 6-7(3), 6-7(4), 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி கண்டார்.
முதல் இரண்டு செட்களில் சிறப்பாக விளையாடி வென்றார் அல்கராஸ். ஆனால் அடுத்த 2 செட்களிலும் ஜிவேரேவ் சுதாரித்து விளையாடி கைப்பற்றினார். இதையடுத்து வெற்றிக்குத் தேவையான கடைசி செட்டை 7-5 என்ற கணக்கில் அல்கராஸ் கைப்பற்றினார். 5 மணி நேரம் 27 நிமிடங்கள் வரை இந்தப் போட்டி நீடித்தது. கடைசி செட்டை வென்ற உற்சாகத்தில் அல்கராஸ், டென்னிஸ் மைதானத்திலேயே படுத்துவிட்டார்.
ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் மிக நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியாக இந்தப் போட்டி மாறியுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை அல்கராஸ் படைத்துள்ளார். மெல்பர்னில் நடந்த போட்டிகளிலேயே நீண்ட நேரம் நடந்த 3-வது போட்டியாகவும், அரையிறுதியின் வரிசையில் முதல் இடத்தில் உள்ள போட்டியாகவும் இடம்பெற்றுள்ளது.
நடப்பு சாம்பியன் தோல்வி
2-வது அரை இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான ஜன்னிக் சின்னரும் (இத்தாலி), 4-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சும் மோதினர். இந்தப் போட்டியில் ஜோகோவிச் 3-6, 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான ஜன்னிக் சின்னரை வீழ்த்தினார்.
சிறப்பாக விளையாடி முதலாவது செட்டைக் கைப்பற்றிய ஜன்னிக் சின்னர் 2-வது செட்டை ஜோகோவிச்சிடம் இழந்தார். ஆனால் 3-வது செட்டில் சுதாரித்து விளையாடி 6-4 என்று சின்னர் கைப்பற்றினார்.
ஆனால், 4, 5-வது செட்களில் அபாரமாக விளையாடிய ஜோகோவிச் 2 செட்களையும் கைப்பற்றி அரை இறுதியில் வெற்றி கண்டார். இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸும், 4-ம் நிலை வீரரான ஜோகோவிச்சும் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாளை மோதவுள்ளனர்.



