நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சோஹைல் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா. கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. சிறிய பிரச்சினைக்கு கூட இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாகவும் இதையடுத்து 2024-ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். அது பலனளிக்காததால், மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி பரஸ்பரம் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஹன்சிகா ஜீவனாம்சம் கோரவில்லை என்று கூறப்படுகிறது.














