Home மாநில செய்திகள் 6 மருத்துவ கல்லூரிகளுக்கு நிலம் எடுக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

6 மருத்துவ கல்லூரிகளுக்கு நிலம் எடுக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

0

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்ககம் வலியுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்தது. இதுதவிர, 34 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.இந்நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக தலா ஒரு மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இதற்கிடையே, 6 அரசு மருத்துவக் கல்லூரிக்கான நிலத்தைகையகப்படுத்தி தருமாறு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம், மருத்துவக் கல்வி – ஆராய்ச்சி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி – ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி கூறியதாவது: மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில், புதிய கல்லூரிகள் தொடங்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டு விண்ணப்பிக்கப்படும். அதற்காக, மாவட்ட தலைமை மருத்துவமனையை ஒட்டி, தலா22 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தருமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த பிறகு, புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். மத்திய அரசின் 60 சதவீத நிதியுதவி, மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் இந்த கல்லூரிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version