விருகம்பாக்கத்தில் ஏவி.எம்.சரவணனின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்பட்டு சென்றார்.
முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனம் ஆற்காடு சாலையில் வரும்போது, இளைஞர் ஒருவர் முதல்வரிடம் மனு கொடுக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், மனு அளிக்க முயன்றவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் (33) என்பதும், திமுக ஒன்றிய மாணவரணி துணைச் செயலர் என்பதும் தெரியவந்தது. இவரது தாய், தந்தை இருவருக்கும் கண் தெரியாது.
வாய் பேசவும் முடியாது. தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இந்து சமய அறநிலையத் துறையில் பணி வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்த மனுவை அளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரது மனுவை விருகம்பாக்கம் போலீஸார் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.












