டெல்லி செங்கோட்டையில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ”கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் முஜம்மிலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக, அவர் தாக்குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை ஆய்வு செய்தோம்.
அப்போது அந்த செல்போனில் அழிக்கப்பட்ட சில தரவுகள் மீட்டெடுக்கப்பட்டன. இதன்படி, கடந்த ஜனவரி முதல் வாரத்தில் டெல்லி செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முஜம்மில் சுற்றித் திரிந்தது அவருடைய செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் முஜம்மிலும் மருத்துவர் உமர் நபியும் டெல்லி செங்கோட்டை பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை நோட்டமிடுவதற்காக அவர்கள் அங்கு வந்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. ஆனால் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதால் அவர்களுடைய திட்டம் நிறைவேறாமல் போயிருக்கலாம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.














